

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 03.25 AM சித்திரை 14, விசுவாவசு வருடம்
கோயம்புத்தூர்,
நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை உள்ளது. அர்ப்பணிப்பு குணம் உள்ளது என்று விஜய் கூறினார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்றும் (சனிக்கிழமை), இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உள்ளார். இதற்காக இன்று காலையிலேயே தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார் விஜய். நேற்று மாலை 3 மணி அளவில் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் சரவணம்பட்டிக்கு காரில் புறப்பட்டார் .அப்போது அவரது காரை பின் தொடர்ந்தவாறு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இரு சக்கர வாகனத்திலும் கார்களிலும் சென்றனர்.
தொடர்ந்து தவெக நிர்வாகிகள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். வாக்குச்சாவடி முகவர்களை பார்த்து கையசைத்தார் விஜய். பின்னர் தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு ‘வாக்குச்சாவடி வியூகம்’ என்ற கையேட்டை வழங்கிய அக்கட்சித் தலைவர் விஜய்!. இதனைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கோவை என்றாலும் கொங்கு பகுதி என்றாலும் இந்த மண்ணின் மரியாதைதான் முதலில் நினைவுக்கு வரும்.. மக்களிடம் வாக்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதற்கான பட்டறை இல்லை. மக்களோடு மக்களாக பழக வேண்டும் என்பதற்கான பட்டறை.. இது வோட்டுக்காக மட்டும் நடக்கும் மாநாடு இல்லை. மக்களோடு மக்களாக நாம் எப்படி ஒன்றிணையப் போகிறோம் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி பட்டறை.
இதற்கு முன்னர் இங்கு பலர் வந்து மக்களை ஏமாற்றி பொய்களை சொல்லி இருக்கலாம். இனி அது நடக்காது..
ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே; இனிமேல் மக்களை ஏமாற்றி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரருக்கு சமம். நாம் எப்படிப்பட்ட ஆட்சி அமைப்போம் என்பதை மக்களிடம் சொல்லுங்கள். நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை, கரை படியாத அரசியல் கைகள், உழைக்க உடம்பில் தெம்பு உள்ளது.. களம் ரெடியாக உள்ளது, போய் கலக்குங்கள்.. நன்றி வணக்கம்” என்று விஜய் கூறினார்.