

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 30, 2025, 09.55 AM சித்திரை 17, விசுவாவசு வருடம்
காஞ்சிபுரம்,
பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 வது இளைய மடாதிபதியாக, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கடசூர்ய சுப்ரமணிய கணேச சர்மா இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்றார். தீட்சை வழங்கப்பட்ட பின்னர் இவருக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டது. விழாவில் தமிழக கவர்னர் உள்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர். கணேசசர்மா ஆந்திர மாநிலம் துனி நகரில் பிறந்தவர்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்தத்தில், அட்சய திருதியை நாளான இன்று (ஏப்ரல் 30) காலை 6 மணி முதல் இளைய மடாதிபதியான, ஸ்ரீ சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவுக்கு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம்
காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்ச கங்க தீர்த்த தெப்ப குளத்தில், நடந்த விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கணேசசர்மாவுக்கு தீட்சை வழங்கி காவி வஸ்திரத்தை வழங்கினார். கணேசசர்மா பூணூல், அரைஞான் கயிற்றை துறந்தார். கமண்டலத்தையும், தண்டத்தையும் கணேசசர்மாவுக்கு விஜயேந்திரர் வழங்கினார்.
தொடர்ந்து கருடாசனம் நிலையில் அமர்ந்து குருவான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வணங்கினார். கணேச சர்மாவுக்கு சாளக்கிராமத்தை தலையில் வைத்து சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து ஆசி வழங்கினார் விஜயேந்திரர்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள், பக்தர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.