அக்டோபரில் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி?

Spread the love

பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம், 03-10:AM

புதுடெல்லி,

பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 2002 மற்றும் 2004-க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், பா.ஜ.க.வுக்கு உதவுவதற்காக தேர்தல் ஆணையம் வாக்காளர் குறித்த தரவுகளில் மோசடி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனிடையே, பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சூழலில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்களது மாநிலங்களில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசியாக எப்போது வாக்காளர்பட்டியல் திருத்தம் நடைபெற்றது ஆகிய தகவல்களை இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைதேர்தல் ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில், நாடு முழுவதும் அக்டோபரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதத்தில் எந்த நாளிலும் பணியை தொடங்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வாக்காளர் திருத்தப்பணிக்கான வழிமுறைகளை நிறைவு செய்யும்படி தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பிழையின்றி உருவாக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest