

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 08.10 AM சித்திரை 10, விசுவாவசு வருடம்
ஸ்ரீநகர்,
சுற்றுலா தலமான காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டத்தின் பஹல்காமின் பைசாராம் பகுதியில் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது, இன்று மதியம் 2:30 மணியளவில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்து உள்னர்.
இச்சம்பவத்தில் வெளிநாட்டினர் இருவர் உட்பட 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்தபடி ஓடினர். காயமடைந்தவர்களை, பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இயக்கத்திற்கு தொடர்பு இரக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

பிரதமர் ஆலோசனை
இத்தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும், சவுதியில் இருக்கும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், அமித் ஷாவை சம்பவ இடத்தைப் பார்வையிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமித் ஷா உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். டி.ஜி.பி., உட்பட ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகள், மெய்நிகர் வழியில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காஷ்மீரில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவங்களில் இதுவும் ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காஷ்மீர் கவர்னர், முதல்வர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து பஹல்காம் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இதுகண்டனத்திற்குரியது. சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த கொடூர செயல்களுக்கு பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. இந்த மோசமான திட்டம் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தீர்மானம் அசைக்க முடியாதது. அது இன்னும் வலிமையாகி உள்ளது.