

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 11, 2025, 09.35 AM சித்திரை 27, விசுவாவசு வருடம்
புதுடில்லி,
நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. எதிர்பாராத இந்த திருப்பத்தை அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகுக்கு அறிவித்தார். அமெரிக்காவின் தீவிர முயற்சியால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக கூறிய டிரம்ப், இரு நாடுகளின் பிரதமர்களையும் பாராட்டினார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமுக்கு சுற்றுலா வந்திருந்தவர்களில், 26 ஹிந்து ஆண்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தேர்ந்தெடுத்து சுட்டுக் கொன்றனர். நாட்டை அதிரவைத்த அந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு மக்கள் கொந்தளித்தனர். அதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
கடந்த 7ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை இந்திய ராணுவம் குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது.
அதில், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக, 7ம் தேதியில் இருந்து மூன்று நாட்களாக இரவு நேர தாக்குதலில் இறங்கியது பாகிஸ்தான்.
நமது வடக்கு, மேற்கு மாநிலங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாக்., ஏவியது. அவற்றை நம் படைகள் நடுவானில் தாக்கி அழித்தன. அதோடு, பாகிஸ்தான் ராணுவ மையங்களை குறிவைத்து எதிர் தாக்குதல் நடத்தின.
அதனால் வெறிகொண்ட பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு – காஷ்மீரின் நான்கு நகரங்களில் விமான தளங்களையும், பொதுமக்களின் வீடுகளையும் குறிவைத்து குண்டு வீசியது. காஷ்மீர் அரசின் உயர் அதிகாரி, ஒரு குழந்தை உட்பட பலர் மரணம் அடைந்தனர். மருத்துவமனை, பள்ளிகளை கூட எதிரிகள் விட்டுவைக்கவில்லை.
பாகிஸ்தான் எந்த அளவுக்கு தாக்குகிறதோ, அதற்கு சமமான அளவிலேயே பலம் பிரயோகித்து இந்தியா எதிர் தாக்குதல் நடத்துவதாக மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், அப்பாவி மக்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதலை துவக்கி விட்டதால், இதற்கு மேலும் பொறுமை காட்ட அவசியமில்லை என இந்திய ராணுவம் தீர்மானித்தது.
முப்படை தளபதிகளை பிரதமர் மோடி அழைத்து பேசினார். ட்ரோன் யுத்தம் முடிந்து, சண்டை அடுத்த கட்டத்துக்கு நகர்வதாக தோன்றியது. பெரிய அளவில் போர் வெடிக்கப் போகிறது என மேற்கத்திய ஊடகங்கள் உரத்த குரலில் ஆரூடம் கூறின.
அந்த நேரத்தில் தான், சமூக ஊடகத்தில் திடீரென ட்ரம்ப் ஒரு செய்தி வெளியிட்டார். ‘இந்தியா- பாகிஸ்தான் சண்டை உடனடியாகவும் நிறுத்தப்படுகிறது. இரவு முழுதும் இரு தரப்புடனும் அமெரிக்கா பேசி வந்தது. அதற்கு பலன் கிடைத்துள்ளது. ‘புத்திசாலித்தனமாக போர் நிறுத்த முடிவுக்கு சம்மதித்த இருநாட்டு பிரதமர்களையும் பாராட்டுகிறேன்’ என, டிரம்ப் தெரிவித்தார்.