
பதிவு: திங்கள்க்கிழமை, செப்டம்பர் 22, 2025, புரட்டாசி 6, விசுவாவசு வருடம் 04-00:AM
புதுடெல்லி,
வாக்காளர் திருத்தப்பணிக்கு 30-ந் தேதிக்குள் தயாராக இருங்கள் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் ‘எஸ்.ஐ.ஆர்.’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இந்த பணியின் மூலம் பீகாரில் இருந்த 7.24 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இது வாக்கு திருட்டு என்று குற்றஞ்சாட்டியதுடன் பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையும் நடத்தினார்.
பீகாரில் நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு 30-ந் தேதிக்குள் தயாராக இருக்குமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. அவரவர் மாநிலங்களில் கடைசியாக நடந்த திருத்தப்பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாராக வைத்திருக்குமாறும் கூறியுள்ளது. எனவே, அக்டோபர்-நவம்பர் மாதவாக்கில் இப்பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.