
பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 07, 2025, புரட்டாசி 21, விசுவாவசு வருடம் 05-30: PM
சென்னை,
உற்பத்தி துறையில் தமிழ்நாடு லீடராக மாறி வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகம் இன்று இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற டிட்கோ, பி.சி.ஐ. ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “ஏரோ டெஃப்கான் 2025” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இம்மாநாடு, இன்று முதல் 9–ந் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இம்மாநாடு தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சூழலுடன் இத்துறை சார்ந்த சர்வதேச நிறுவனங்களை இணைக்கும் முக்கிய தளமாக விளங்கும்.
இம்மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் 300 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே 5,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்பு கூட்டங்களும் நடைபெறுகின்றன. மேலும், இம்மாநாட்டின் கண்காட்சியில் போயிங், ஏர்பஸ், லாக்ஹீட் மார்ட்டின், டசால்ட் ஏவியேஷன், ஹால், பெல், எல் அன்ட் டி டிபன்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், சஃப்ரான் மற்றும் டாடா அன்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஒன்றிய அரசு நிறுவனங்களான டி.ஆர்.டி.ஓ. இஸ்ரோ, ஹால், பி.டி.எல்., ஏவிஎன்எல் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.

மேலும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு ஏரியல் வெக்கில் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சுற்றுலா துறை இக்கண்காட்சியில் பங்கேற்று, தொழில்துறை வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய தொடர்புகளை ஒருங்கிணைக்கும் மாநிலத்தின் அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகளை அமைத்துள்ளன. ஐஐடி மெட்ராஸ், எஸ்ஆர்எம், அண்ணா பல்கலைக்கழகம், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
இந்த மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான – ஏரோ-டெஃப்-கான் 25 என்ற இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் முதன்முறையாக நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்.
தமிழ்நாடு இன்றைய தினம், இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து, உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட முன்னோடியான மாநாடுகளை நம்முடைய தொழில்துறை சார்பில் நடத்துவதால்தான், இந்த மாநாடுகள் எல்லாம், உலகளவில் பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, அனைத்துவிதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதன் அடையாளம்தான் இந்த மாநாடு.
இது வெறும் கண்காட்சி இல்லை. புதிய தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களிடையே கூட்டு முயற்சியில் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான தளம்.
உற்பத்தி துறையில் ‘லீடர்’
தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது. தமிழ்நாடு உற்பத்தித் துறையில் லீடர் -ஆக மாறிக்கொண்டு வருகிறது. ஏற்றுமதி செய்யப்படும் மொத்த தானியங்கி வாகனங்களில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் எவ்வளவு தெரியுமா? 40 விழுக்காடு!
அதுமட்டுமா? மூன்றில் இரண்டு பங்கு இருசக்கர மின்வாகனங்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது.
2024–25–ம் ஆண்டில், 14.6 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிலும் நாம்தான் முதலிடம்!
45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டின் மொத்த ஜி.டி.பி.–யில் உற்பத்தி துறை 20 விழுக்காடு பங்கு வகிக்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தில், தமிழ்நாடு முன்னணி 50 இடங்களில் இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி
இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இரட்டை இலக்கை எட்டிப் பிடித்திருக்கும் ‘ஒன் அண்ட் ஒன்லி’ (One and Only) மாநிலம் தமிழ்நாடுதான். எதைப் செய்தாலும், ஆல்ரவுண்டாக, பெஸ்ட்டாக செய்வதால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது. இதில், மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது பாதுகாப்புத் தொழில்துறை.

‘தமிழ்நாடு பாதுகாப்புத் தொழிற்துறை வழித்தடத் திட்டம்’ இந்த துறை சார்ந்த வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் துறையில், இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கியப் பங்காற்ற இருக்கிறது.
உயர்தர ஜெட் என்ஜின் பாகங்களில் இருந்து, டிரோன்கள் உற்பத்தி வரை நடைபெற இருக்கிறது. வளர்ந்துவரும் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திப்பிரிவுகள் இதில் இருக்கிறது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத் தொலைநோக்குத் திட்டம் வெறும் எண்ணமாக மட்டுமல்லாமல், பல முக்கியத் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததன் மூலமாக, இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத்தில் அமைந்திருக்கும் நகரங்களில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு தொழிற்துறைப் பூங்கா’
- கோவை வரப்பட்டியில், 360 ஏக்கரில் ‘பாதுகாப்பு தொழிற்துறைப் பூங்கா’ அமைக்கப்பட்டு வருகிறது.
- விமான பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ள நேரடியாக ஓடுதள அணுகு வசதியுடன் கூடிய வான்வெளிப் பூங்கா, சூலூரில் 200 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது.
- திருச்சியில் 90-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயந்திரவியல் உற்பத்தித் துறையில் தங்கள் தொழில்களை பெருக்க ட்ரீட் அமைப்பு உதவுகிறது.
- சென்னைக்கு அருகில் வல்லம் வடகாலில் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை வான்வெளி நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டு வரும் ஏரோ-ஹப் என்ற திட்டம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.
ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு பெற இலக்கு
தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியதில் இருந்து, இதுவரை 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இதில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
2032-க்குள், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த வழித்தடத்தில் இருக்கும், ஒவ்வொரு நகரமும் தனித்துவமான மையங்களாக விளங்குகிறது.
சென்னை என்பது ஆராய்ச்சி மற்றும் கடற்படை அமைப்புகளுக்கான மையமாகவும், கோயம்புத்தூர் – நுண்பொறியியல் திறனுக்கான மையமாகவும், ஓசூர் – வான்வெளி மற்றும் மின்னணு தொழில்நுட்ப மையமாகவும், சேலம் – உயர் தொழில்நுட்பப் பொருட்கள் மையமாகவும், திருச்சி – கனரக இயந்திர உற்பத்தி மையமாகவும் இருக்கிறது. இவை எல்லாம் ஒன்றாக சேர்த்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீட்டிற்கு உகந்த இடமாக விளங்குவதைக் காட்டுகிறது.
பாதுகாப்பு துறைக்கு துணை
தூத்துக்குடியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வைத்து விண்வெளித் துறையில் பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான திட்டப்பாதையை நாங்கள் வகுத்திருக்கிறோம். இந்திய விண்வெளித் துறை வளர்ச்சிக்கு – தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். சென்னை காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், சூலூர் மற்றும் வல்லம் வடகால் வான்வெளி பூங்காக்கள் – தூத்துக்குடியில் அமையவுள்ள விண்வெளிப் பூங்கா ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கும் உறுதுணையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் உங்களை கவரும் தொழில் சூழல் இருக்கிறது. திறமையான இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மட்டுமல்ல, சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பங்கும் பெரிய அளவில் இருக்கிறது. அதில், 700-க்கும் மேற்பட்டவை வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் செயல்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு இப்போதே தயாராக இருக்கிறது.
இன்று இந்த நிகழ்வில். எங்களோடு இணைந்திருக்கும் 19-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சேர்ந்து, தொழில் வளர்ச்சிக்காக செயல்படுவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன். செயல் வேகத்துடன், உறுதியுடன், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற தமிழ்நாடு முழு ஆதரவளிக்கும். வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கான முன்னணித் தளமாக தமிழ்நாடு திகழ வேண்டும்! அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை!
வானூர்தி, விண்வெளி, கப்பல் உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புதுமைகள் நிறைந்த – ஏற்றுமதிக்கு உகந்த – தன்னிறைவு பெற்ற – இந்தியாவை உருவாக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் நண்பர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். இது, ஒரு புதிய காலத்தின் தொடக்கமாக அமையட்டும். இந்தியாவின் பாதுகாப்பை மட்டுமல்ல, உலக அமைதி, வளம் மற்றும் முன்னேற்றத்தை இயக்கும் ஆற்றலாகவும் தமிழ்நாடு திகழட்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, விஞ்ஞானி டாக்டர் தாஸ், ஏரோஸ்பேஸ் முதன்மை செயல் அலுவலர் ஸ்டீபன் காஸ்டெட், தொழில் துறை செயலாளர் அருண் ராய்,
மேலாண்மை இயக்குநர்கள் தாரேஷ் அகமது, சந்தீப் நந்தூரி, ஏர் கமாண்டர் சர்மா, டி.ஆர்.டி.ஓ. முன்னாள் தலைவர் கிறிஸ்டோபர், கில் இந்தியா தலைவர் பாலசுப்பிரமணியன், இந்திய கடற்படை அதிகாரி சதீஷ் ஷினாய், வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களைச் சார்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.