

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 06, 2025, 06.20 AM சித்திரை 23, விசுவாவசு வருடம்
புதுடில்லி,
இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை அதிகாரிகளுடன், பிரதமர் மோடியும் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங்கை அழைத்து பேசினார். ராணுவத்தின் உத்தேச தாக்குதல் திட்டம் குறித்து பிரதமரிடம் அவர் விளக்கினார்.
இந்த நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அவசர உத்தரவு பிறப்பித்தது. போர் நடக்கும்போது பொது மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று பயிற்சி அளிப்பதே போர் ஒத்திகை. இது போன்ற பயிற்சி, 1971ல் நடந்த இந்தியா – பாக்., போரின்போது கடைசியாக நடத்தப்பட்டது.
போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
இரவில் மின்சாரத்தை துண்டித்து வெளியே தெரியாத வகையில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிற்பபு பயிற்சி வழங்க வேண்டும்.
எதிரிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவது, பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதாள பதுங்கு அறைகளை ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி வைத்திருக்கின்றனர்.
இதேபோல பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் எல்லையோர கிராமங்களிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியை ஒட்டிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யக்கூடாது. வாகனங்களின் முகப்பு விளக்குகளைகூட ஒளிரச் செய்யக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர். இதை எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த கண்டிப்புடன் பின்பற்றினர்.
கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று அவசரமாக கூடியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கட்டிடத்தில் இந்தக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினர் பஹல்காமில் நடத்திய தாக்குதல் குறித்து இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி கடும் கண்டனத்தை பதிவு செய்ததாகத் தெரிகிறது.
அதேபோல், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் சார்பிலும் புகார் பதிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு:
வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிக்க விடுதல்
எதிரி விமானங்கள் குண்டு வீச வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலி கேட்டதும், பொதுமக்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் எல்லா வேலையையும் விட்டுவிட்டு, உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிய வேண்டும். சாலைகள், வீதிகளில் இருந்தால் சட்டென கீழே படுக்க வேண்டும். இந்த சைரன்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை மாநில அரசுகள் முதலில் சோதிக்க வேண்டும்.
தாக்குதல் நடத்தப்பட்டால் பாதுகாத்து கொள்வது குறித்து, பொது மக்கள், மாணவர்களுக்கு பயிற்சி
தற்போதைய தலைமுறையினர் போரை பார்த்தது இல்லை என்பதால், இது மிகவும் முக்கியமானது. எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகள் வருவது தெரிந்ததும், மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக தெரு விளக்குகள் அணைக்கப்படும். வீடுகளில் மின் விளக்குகள் எரிந்தால், அது வெளியே தெரியாமல் இருக்க கதவு, ஜன்னல்களை மூட வேண்டும். கண்ணாடி ஜன்னலாக இருந்தால் கருப்பு தாள் அல்லது துணியால் மறைக்க வேண்டும். மின் விளக்குகளை அப்போது அணைத்து விடுவது உத்தமம்.
விபத்து தடுப்பு நடவடிக்கைகள்
திடீர் அலெர்ட் வந்தால், உடனே வீட்டுக்கு போய் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் வரும். அதனால் ஏற்படும் அவசரத்தில், வாகனங்கள் மோதி விபத்து நேர்வது சகஜம். அப்போது என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதற்கான பயிற்சி இது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும்.
முக்கிய ஆலைகள், ஆயுத கிடங்குகளை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடு
போரில் எதிரிகள் வைக்கும் முதல் குறி, எதிரியின் ஆயுத தளங்களாக இருக்கும். அடுத்தது, மின் உற்பத்தி நிலையம், டெலிவிஷன் ஸ்டேஷன், டெலிபோன் எக்சேஞ்ச் போன்ற இடங்களாக இருக்கும். இவை எந்த இடத்தில் உள்ளன என்பதை எதிரிகள் ஏற்கனவே அறிந்திருப்பர். ஆனால், குண்டு வீசும் விமானங்களோ, ஏவுகணைகளோ வரும்போது, அவர்கள் அறிந்திருந்த இடத்தில் இந்த நிலையங்கள் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி குழப்புவதற்காக, அந்த ஆலைகள் அல்லது அமைப்புகளை காடு, மரங்கள், செடி, கொடி போன்ற துணி அல்லது தார்பாய்கள் போர்த்தி மறைக்க வேண்டும்.
மீட்பு பணி பயிற்சி
என்ன தான் உஷாராக இருந்தாலும், அதையெல்லாம் மீறி சில இடங்கள் நேரடியாக தாக்கப்பட்டு, பொதுமக்கள் காயம் அடைய வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில், அந்த இடங்களில் இருந்து, இறந்தவர்களையும் காயம் அடைந்தவர்களையும் காலதாமதம் இல்லாமல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது எப்படி என்பதற்கான பயிற்சி இது.
மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் முழு ஆதரவு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடியிடம் உறுதி அளித்தார்.
காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியோரை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். ரஷ்யாவின், 80வது வெற்றி தின கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தாண்டு இறுதியில் நம் நாட்டில் நடக்கும் இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும்படி, ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேசினர்.